டெல்லி : இந்தியாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தினசரி பாதிப்பு 3 லட்சங்களையும், பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. நாட்டில் கடந்த 18ம் தேதி முதல் நேற்றுடன் முடிந்த கடந்த 10 நாட்களில் மட்டுமே 31 லட்சத்து 8 ஆயிரத்து 698 பேர் தொற்றினால் பாதித்து இருக்கின்றனர். உலகளவில் வேறு எந்த நாட்டிலும் இந்தளவுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டது கிடையாது. அதேபோல், இதே காலத்தில் 22 ஆயிரத்து 245 பேர் இறந்துள்ளனர். கடந்த 18ம் தேதிக்கு முந்தைய 10 நாட்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரம் வரையில் இருந்தது. இது நேற்றைய நிலவரப்படி 100 சதவீதம் அதிகமாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கை வசதி குறைவு, ரெம்டெசிவிர், கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளும் நிலவி வருகின்றன.இதையடுத்து இந்தியாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் உதவி செய்து வருகின்றன.