மேல்பாடி அருகே திருமணம் செய்வதாக ஏமாற்றியதால் காதலன் பெயரை ரத்தத்தில் எழுதிவிட்டு பிளஸ் 2 மாணவி தற்கொலை

* டயர் போட்டு சடலம் எரித்த காதலனின் உறவினர்கள்

* நடவடிக்கை கோரி போலீசில் பெற்றோர் புகார்

பொன்னை : மேல்பாடி அருகே காதலன் பெயரை ரத்தத்தால் சுவற்றில் எழுதிவிட்டு பிளஸ்2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலன் மற்றும் பெற்றோர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டம், பொன்னை அடுத்த சோமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன்- கோவிந்தம்மாள் தம்பதியின் மகள் கவி(18). பிளஸ் 2 படித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் சிவராமன்(20). இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த, இருவரது பெற்றோரும் கவி, சிவராமன் ஆகியோருக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கவியை தவிர்த்துவிட்டு, சிவராமனின் பெற்றோர் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கவி கடந்த 4ம் தேதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

முன்னதாக தனது கையில் பிளேடால் கீறிக்கொண்டு ரத்தத்தை எடுத்து வீட்டின் சுவற்றில் தனது பெயருடன், காதலன் சிவராமன் பெயரை சேர்த்து எழுதி வைத்துள்ளார்.

இந்நிலையில், மகளின் சாவுக்கு நீதி கேட்டு நேற்று முன்தினம் வேலூர் எஸ்பி அலுவலகத்தில்  பெற்றோர் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து, நேற்று பொன்னை காவல் நிலையத்தில் கவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதில், ‘எனது மகளை திருமணம் செய்து கொள்வதாக சிவராமன் என்பவர் ஆசைவார்த்தை கூறி பின்னர் திருமணத்திற்கு மறுத்ததால் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் நாங்கள் அதிர்ச்சியில் இருந்தபோது, எங்கள் ஊரைச் சேர்ந்த சிவராமனின் உறவினர்களான குருநாதன், பாபு ஆகிய 2 பேர் சடலத்தை தூக்கிச் சென்று, டயர் போட்டு எரித்துவிட்டனர். எனவே எனது மகளை திருமணம் செய்வதாக ஏமாற்றிய சிவராமன் மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: