தொடர்ந்து மறுக்கப்படும் உரிமைகள் இலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்

சென்னை: இலங்கையில் தமிழர் நிலங்கள் பறிக்கப்படுவதாகவும் தொடர்ந்து ஈழத்தமிழர் உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கையில் சிங்களர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்குமான போர் 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. 12 ஆண்டுகள் கடந்த பின்னரும், ஈழத்தமிழர்களுக்கு எந்த உரிமையும் கிடைக்கவில்லை. இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை. உலக நாடுகளை ஏமாற்ற, ஏற்கனவே பறித்த நிலங்களை திரும்ப வழங்குவதாக போக்குக் காட்டிக்கொண்டே, மறுபுறம், புதிய நிலங்களைப் பறித்து வருகிறது சிங்கள அரசு.அண்மையில், மட்டக்களப்பு தமிழ் விவசாயிகளின் நிலங்களில் இலங்கை வனத்துறையினர் திடீரென எல்லைக் கற்களைக் கொண்டு வந்து நட்டு, இவை எல்லாம் வனப்பகுதிகள் என அறிவிப்பு செய்து இருக்கிறது. இந்த இடங்களை விட்டுத் தமிழர்கள் வெளியேற வேண்டும் என மிரட்டுகின்றார்கள். தமிழர்களின் நிலங்களை இலங்கை அரசு பறிப்பதை இந்திய அரசும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்த வேண்டும். ஏற்கனவே பறித்துக் கொண்ட நிலங்களில் இருந்து சிங்களக் குடியேற்றங்களையும், சிங்களப் படை முகாம்களையும் அகற்ற வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.

Related Stories: