13ம் தேதி ஆதாரங்கள் வெளியிடப்படும் அஞ்சனாத்ரி மலையில்தான் ஆஞ்சநேயர் பிறந்தார்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதியில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்ததற்கான ஆதாரங்கள் ,வரும் யுகாதி தினத்தன்று பக்தர்களிடம் தெரிவிக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.கலியுக வைகுண்டமான திருப்பதியில் உள்ள  சேஷாசல மலைத்தொடரில் உள்ள 7 மலையில் வெங்கடேஸ்வர சுவாமி அருள்பாலித்து வருகிறார்.  ரிஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, சேஷாத்ரி, நாராயணாத்ரி, வெங்கடாத்ரி ஆகிய 7 மலைகள் மீது திருமலையில் வீற்றிருப்பதால்   அவர் ஏழுமலையான் என்று அழைக்கப்படுகிறார். இந்நிலையில், சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்திரி மலையில் ராமரின் சிஷ்யரான  ஆஞ்சநேயரின் பிறப்பிடம் என்பதற்கான அடையாளம் காணப்பட்டுள்ளதாக திருப்பதி  தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று அது வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்துள்ளார். இதுகுறித்து புராண, இதிகாசங்களை ஆய்வு செய்ய, 6 பண்டிதர்கள் அடங்கிய குழுவை அமைத்தோம். அந்த குழுவினர் பல  புராணங்களை  ஆராய்ந்து  தகவல்களை சேகரித்தனர். அதன்படி, ஆஞ்சநேயர், சேஷாசல மலையில் உள்ள அஞ்சனாத்திரி மலையில் பிறந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து  ஆய்வு தகவல்கள், வரும் 13ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதியன்று பக்தர்களுக்கு ஆதாரத்துடன் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: