திருமலை: திருப்பதியில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்ததற்கான ஆதாரங்கள் ,வரும் யுகாதி தினத்தன்று பக்தர்களிடம் தெரிவிக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.கலியுக வைகுண்டமான திருப்பதியில் உள்ள சேஷாசல மலைத்தொடரில் உள்ள 7 மலையில் வெங்கடேஸ்வர சுவாமி அருள்பாலித்து வருகிறார். ரிஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, சேஷாத்ரி, நாராயணாத்ரி, வெங்கடாத்ரி ஆகிய 7 மலைகள் மீது திருமலையில் வீற்றிருப்பதால் அவர் ஏழுமலையான் என்று அழைக்கப்படுகிறார். இந்நிலையில், சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்திரி மலையில் ராமரின் சிஷ்யரான ஆஞ்சநேயரின் பிறப்பிடம் என்பதற்கான அடையாளம் காணப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.