வரட்டுப்பள்ளம் அணையில் ஆனந்த குளியலிடும் யானை

அந்தியூர்: அந்தியூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கல்லுப்பள்ளம், வரட்டுப்பள்ளம், கும்பரவாணிபள்ளம் ஆகிய பள்ளங்களின் இடையே அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை. இந்த அணை பகுதியையொட்டி வனப்பகுதி உள்ளதால் வனவிலங்குகளுக்கு நீராதாரமாக விளங்கி வருகிறது. தற்போது கோடை காலம் துவங்கி  வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் வனவிலங்குகள் தண்ணீரை தேடி நீர்நிலைகள் உள்ள பகுதிகளுக்கு வர தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை வரட்டுப்பள்ளம் அணையில் மதகு அமைந்துள்ள கரை பகுதியை ஒட்டி சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை தண்ணீரில் இறங்கி சுமார் ஒரு மணி நேரம் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தது.

மேலும் அந்த யானை கரைப் பகுதிக்கு வந்தவுடன் அப்பகுதியில் நின்றிருந்த மற்றொரு யானையுடன் சண்டையிட்டுக் கொண்டது. இதனைப் பார்த்த வனத்துறையினர் யானைகளை விரட்டியடித்தனர். பின்னர் யானைகள் அருகிலிருந்த வனப்பகுதியில் சென்று மறைந்தது. யானைகள் மற்றும் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வரட்டுப்பள்ளம் அணையை பார்க்க சுற்றுலாப்பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் வரட்டுப்பள்ளம் சோதனைச் சாவடியில் இருந்து பர்கூர் வரை செல்லும் மலைப்பாதையில் அமர்ந்து புகைப்படங்கள் எடுப்பது வாகனங்களை நிறுத்துவது ஆகியவை செய்யக்கூடாது என அந்தியூர் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: