வாக்குச்சாவடிக்கு பாஜ கொடியுடன் காரில் வந்த நடிகை குஷ்பு மீது வழக்கு பதிவு: பட்டினப்பாக்கம் போலீஸ் நடவடிக்கை

சென்னை: தேர்தல்  விதிகளை மீறி வாக்குச்சாவடி மையத்துக்கு பாஜ கொடி கட்டிய காரில் வந்த நடிகை குஷ்பு மீது பட்டினப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் மயிலாப்பூர் கிழக்கு பகுதி 126வது திமுக வட்ட செயலாளர் கண்ணன் நேற்று முன்தினம் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், மந்தைவெளி பகுதியில் உள்ள சைதன்யா பள்ளியில் வாக்கு பதிவு நடைபெற்றது. காலை 10.47 மணிக்கு TN 06 W 6558 பதிவு எண் கொண்டு காரில் ஆயிரம்விளக்கு தொகுதி பாஜ வேட்பாளர் நடிகை குஷ்பு சுந்தர் மற்றும் அவரது கூட்டணி கட்சியின் ஆதரவாளர்களுடன் வந்தார். அப்போது தேர்தல் ஆணைய சட்ட விதிகளுக்கு எதிராக அவரது காரில் பாஜ கொடியை பறக்க விட்டு அத்துமீறி வாக்குச்சாவடி மையத்திற்குள் நுழைந்துள்ளார்.

அதனை அங்கு பணியில் இருக்கும் தேர்தல் அதிகாரிகள், காவல் துறை அலுவலர்கள் அனைவரும் எந்ததொரு ஆட்சபனையும் செய்யாமல் அனுமதித்துள்ளனர். எனவே தேர்தல் விதிகளை மீறி வாக்குசாவடி மைய வளாகத்திற்குள் பாஜ கொடியுடன் வந்த ஆயிரம் விளக்கு பாஜ வேட்பாளர் குஷ்பு சுந்தர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரின் படி பட்டினப்பாக்கம் போலீசார் நடிகை குஷ்பு சுந்தர் மீது பொது இடங்களில் கேடுவிளைவித்தல் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: