திருவண்ணாமலை: வாக்களித்துவிட்டு ஊர்திரும்ப பஸ் வசதியின்றி தவித்த பொதுமக்கள், திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் பட்டதாரிகள் சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக, கட்டுமான தொழில் உள்ளிட்டவைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் குடும்பம், குடும்பமாக பெருநகரங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக ஏராளமானோர் தங்களுடைய சொந்த கிராமங்களுக்கு வந்திருந்தனர். நேற்று முன்தினம் தங்களுடைய ஜனநாயக கடமையை முடித்துவிட்டு, மீண்டும் வேலைக்காக வெளியூர் திரும்புவதற்கு திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு பஸ்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.