ஆம்பூர் அருகே பரபரப்பு கைகளை கட்டி முகம் சிதைத்து காவலாளி கொடூர கொலை-போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முயற்சி

ஆம்பூர் : ஆம்பூர் அருகே கைகளை கட்டி முகம் சிதைத்து காவலாளி கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் போலீசுக்கு தெரியாமல் சடலத்தை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கென்னடி குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(50). இவர் ஆம்பூர் அருகே உள்ள ஒரு ஓட்டலில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவரும் இவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து

தனித்தனியாக வசித்து வந்தனர்.

 இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவிந்தராஜ், வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ராமாலையில் உள்ள தனது மனைவி வீட்டுக்கு சென்று வசித்து வந்தார். இந்நிலையில்  நேற்று கோவிந்தராஜ் இறந்துவிட்டதாக கூறி அவரது சடலத்தை அவரது சொந்த ஊரான கென்னடிகுப்பத்துக்கு மனைவியின் குடும்பத்தினர் கொண்டு வந்தனர். தொடர்ந்து அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அப்போது கோவிந்தராஜின் முகம் சிதைக்கப்பட்ட நிலையில், கைகள் கட்டப்பட்ட அடையாளம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சிலர். ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அடக்கம் செய்வதை தடுத்து நிறுத்தினர்.

மேலும் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் ஆம்பூர் தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: