தாம்பரம்: தாம்பரம் தொகுதி அமமுக வேட்பாளர் கரிகாலன் நேற்று மாலை மேற்கு தாம்பரம் பகுதிகளில் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து, இறுதிகட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘நான் கடந்த 5 ஆண்டுகள் தாம்பரம் நகர மன்ற தலைவராக இருந்தபோது, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்துள்ளேன். எனவே, அந்த பணிகளை தாம்பரம் தொகுதி முழுவதும் செய்திட, எனக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். தமிழகத்தில், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அமமுக ஆட்சி அமைந்தவுடன், சுத்தமான குடிநீர், தரமான சாலைகள், சுகாதாரமான மருத்துவமனை, குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம், தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துதல் உள்ளிட்ட திட்ட பணிகளை செய்வேன்.