மதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள முங்குபட்டியை சேர்ந்த முருகன் மகன் அருண்பாண்டியன்(25). இவர், சென்னையில் பட்டாலியன் போலீஸ்காரராக பணி புரிந்து வந்தார். 3 மாத மருத்துவ விடுப்பில் சொந்த ஊருக்குச் சென்றவர், கடந்த சில நாட்களாக மதுரை ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும், போலீஸ்காரரான தனது சகோதரர் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு, இவரது சகோதரர் தேர்தல் பணிக்காக சென்று விட்டதாக கூறப்படுகிறது. நேற்று பகல் ஒரு மணி அளவில், போலீஸ்காரர் அருண்பாண்டியன் வீட்டில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.