மக்கள் கோரிக்கை நிறைவேற்றுவேன்: மாதவரம் சுதர்சனம் உறுதி

புழல்: மாதவரம் தொகுதி திமுக வேட்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் நேற்று புத்தாகரம், சூரப்பேடு, கதிர்வேடு, புழல் உள்ளிட்ட பகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், தொண்டர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் அவரிடம், ‘தங்கள் பகுதியில் மழைநீர் கால்வாய், சாலை, குடிநீர், பாதாள சாக்கடை வசதிகள் செய்து தர வேண்டும்.  கொரட்டூர் கால்வாயை சீரமைக்க வேண்டும். இப்பகுதிக்கு புதிதாக அரசு மருத்துவமனை, பேருந்து நிழற்குடைகள் அமைத்து தரவேண்டும். பிராட்வேயில் இருந்து ரெட்டேரி வழியாக புத்தாகரம், சூரப்பட்டு பகுதிக்கு மாநகர பேருந்து இயக்க வேண்டும்,’ என தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த சுதர்சனம், ‘நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதும் உங்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பேன்,’ என்றார். பிரசாரத்தின்போது, மாதவரம் தெற்கு பகுதி திமுக செயலாளர் துக்காராம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மஞ்சம்பாக்கம் காசிநாதன், காங்கிரஸ் மாநில செயலாளர் வி.பர்ணபாஸ், நிர்வாகிகள் சங்கீதா பாபு, ராஜன் பர்ணபாஸ், திமுக வட்ட நிர்வாகிகள் பி.சுரேஷ், பொன் சதீஷ்குமார், கதிர்குமார், ஆ.சரவணன், விஜயசந்தர், சுரேஷ், புத்தாகரம் ஏழுமலை, சூரப்பட்டு ராம், ரமணா, சரவணன், சுந்தரம், காங்கிரஸ் நிர்வாகிகள் கதிர், சந்திரசேகர் உள்பட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: