அம்பத்தூர்: அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலை ஆதரித்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி முகப்பேர் பகுதியில் நேற்று வாக்கு சேகரித்தார். அவருக்கு பொது நலச்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். அப்போது டி.ஆர்.பாலு எம்.பி பேசியதாவது: அம்பத்தூர் தொகுதியில் அதிகரித்துள்ள வீட்டு வரியை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முகப்பேர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும். பழைய கழிவுநீர் இணைப்பு மறுசீரமைப்பு செய்யப்படும். ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும். அரசு உணவகங்கள் மேம்படுத்தப்படும். எனவே, நீங்கள் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.