அமித்ஷா பேரணியில் சாலையோர வாய்க்கால் ஸ்லாப் உடைந்து 10க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம்!: ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதி..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் அமித்ஷா பேரணியில் சாலையோர வாய்க்கால் ஸ்லாப் உடைந்து 10க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயமடைந்துள்ளனர். ரத்தம் சொட்ட சொட்ட காயமடைந்த பெண்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மாநில சட்டபேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் இன்று லாஸ்பேட்டை பகுதியில் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரமானது லாஸ்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையில் இருந்து தொடங்கியது. பிரச்சார கூட்டத்தின் முதல் வாகனமாக தலைவர்கள் அமித்ஷா சென்ற வாகனம் சென்று கொண்டிருந்தது.

அதன் பிறகு 2ம் கட்ட வாகனம் சென்று கொண்டிருந்தது. அமித்ஷா சென்ற வாகனத்திற்கு முன்பு தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் நடைபயணம் சென்றனர். கிட்டத்தட்ட 1 கிலோ மீட்டர் அளவுக்கு இந்த பிரச்சாரமானது நடைபெற்றது. தொடர்ந்து, கருவடிக்குப்பம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது அமித்ஷாவை பார்ப்பதற்காக வாய்க்காலின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் அமித்ஷாவுக்கு கைகளை அசைத்து உற்சாகப்படுத்தி கொண்டிருந்தனர். அச்சமயம் வாய்க்காலின் மேல் போடப்பட்டிருந்த ஸ்லாப் திடீரென உடைந்து ஆண்கள், பெண்கள் என பலர் வாய்க்காலில் தவறி விழுந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கூட்டத்தை அப்புறப்படுத்தி வாய்க்காலில் தவறி விழுந்த பெண்களையும், ஆண்களையும் மீட்டு அருகிலிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.  ரத்தம் சொட்ட சொட்ட காயமடைந்த பெண்களையும் கண்டுகொள்ளாமல் பேரணியானது சென்றுகொண்டு தான் இருந்தது. குறிப்பிட்ட போலீசார் மட்டுமே காயமடைந்தவர்களை மீட்டனர். கட்சி நிர்வாகிகளோ, கட்சி தலைவர்களோ காயமடைந்தவர்களை சிறிதும் பொருட்படுத்தவில்லை. அமித்ஷா பேரணியில் சாலையோர வாய்க்கால் ஸ்லாப் உடைந்து பலர் சேதமடைந்த நிகழ்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: