தாம்பரம் தொகுதியில் கரிகாலன் தீவிர பிரசாரம்

தாம்பரம்: தாம்பரம் தொகுதி அமமுக வேட்பாளர் கரிகாலன் நேற்று மேற்கு தாம்பரம், கன்னடபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசுகையில், ‘‘தாம்பரம் நகர மன்ற தலைவராக இருந்தபோது, பல்வேறு பகுதிகளில் புதிய சாலைகள் அமைத்து தந்துள்ளேன். குறிப்பாக, நான் தாம்பரம் நகர மன்ற தலைவராக போட்டியிடும்போது, காந்திநகர் பகுதி மக்களிடம் ஒரு உறுதி அளித்தேன். அது என்னவென்றால், இப்பகுதியில் உள்ள குப்பை கிடங்கை முழுமையாக அகற்றி, உங்களை சுகாதார சீர்கேட்டில் இருந்து மீட்பேன் என்பதுதான் அந்த உறுதி. தற்போது இப்பகுதியில் உங்களை சந்திக்க வரும்போது அந்த பணியை நான் முழுமையாக முடித்து விட்டேன் என்ற மகிழ்ச்சியில் வந்துள்ளேன்.

இதேபோல, மீண்டும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பொதுமக்களுக்காக செய்திட வருகின்ற சட்டமன்ற தேர்தலில், பொதுமக்கள் அனைவரும் குக்கர் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெற செய்ய வேண்டும்,” இவ்வாறு அவர் பேசினார். இதில், கட்சி செய்தி தொடர்பாளர் தாம்பரம் நாராயணன், நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தேமுதிக நகர செயலாளர் செழியன், அமுமுகவை சேர்ந்த முன்னாள் நகரமன்ற உறுப்பினர் மல்லிகா, எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் செல்லப்பா, தேமுதிக வட்ட செயலாளர் முரளி மனோகர், தேமுதிக தாம்பரம் நகர மகளிரணி செயலாளர் வள்ளி, வட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜ், அபயம் ஜெயகாந்த் உட்பட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

Related Stories: