சென்னை: கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமெடுத்துள்ளது. கடந்த 19 நாளாக தொடர்ந்து தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. அதில், ஒரே நாளில் 56,211 பேர் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினசரி பாதிப்பில் மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், கேரளா, தமிழ்நாடு, சட்டீஸ்கர் ஆகிய 8 மாநிலங்கள் 84.5 சதவீதத்தை கொண்டுள்ளன. இதற்கிடையே, அரசியல் கட்சி தலைவர்கள் விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான நல்லகண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவால் பாதித்த 95 வயதான நல்லகண்ணுவுக்கு நுரையீரலில் சிறிது பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நல்லகண்ணு விரைவில் நலம் பெற்று அவர் வீடு திரும்ப வேண்டும் என்று பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.