பெரம்பலூர அருகே காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு-அடித்து கொலையா? பெற்றோர் புகாரால் பரபரப்பு

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே இனாம் அகரம் கிராமத்தில் காணாமல் போன 11 வயது சிறுவன் மர்ம காயங்களுடன் கல்லாற்றில் சடலமாக மீட்கப்பட்டான். அவன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என பெற்றோர் புகார் செய்துள்ளனர்.பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்துள்ள இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகன் அன்புகுமார் (11). அங்குள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அன்புகுமார் தனது நண்பர் வீட்டுக்கு செல்வதாக சொல்லி விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றவன் மீண்டும் வீட்டிற்கு திரும்பிவரவில்லை. பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அங்குள்ள கல்லாற்றில் தேங்கியுள்ள தண்ணீரில் அன்புகுமார் சடலமாக மிதந்துள்ளான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெற்றோர்கள் சிறுவனின் சடலத்தை தண்ணீரிலிருந்து மீட்டனர். அப்போதுசிறுவனின் வாய் மற்றும் கைகளில் காயம் இருந்ததால் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், யாரோ அடித்துக் கொலை செய்து விட்டனர் எனவும் சிறுவனின் தந்தை அசோக்குமார் வி.களத்தூர் போலீசில் புகார் செய்தார்.

புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுவன் அன்பு குமாரின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசுத்தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவுசெய்து சிறுவனை யாரும் அடித்துக் கொலை செய்து கல்லாற்றில் தலைமறைவாக வீசிச்சென்றுள்ளனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: