3 ரபேல் விமானங்கள் நாளை இந்தியா வருகை

புதுடெல்லி: பிரான்சில் இருந்து 4வது கட்டமாக மேலும் 3 ரபேல் ரக போர் விமானங்கள் நாளை இந்தியா வந்து சேர உள்ளன. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க, மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. கடந்தாண்டு ஜூலையில் முதல்கட்டமாக 5 ரபேல் போர் விமானங்களும், 2வது கட்டத்தில் 3, 3வது கட்டத்தில் 3 என மொத்தம் 11 ரபேல் விமானங்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது, 4வது கட்டமாக மேலும், 3 ரபேல் போர் விமானங்கள் நாளை இந்தியா வந்தடைய உள்ளன. பிரான்சில் இருந்து நாளை காலை 7 மணிக்கு புறப்படும் இந்த விமானங்கள் இரவு 7 மணிக்கு குஜராத் வந்தடையும். இந்த விமானங்கள் ஓமன் வளைகுடாவை கடக்கும் போது, நடுவானில் அவற்றுக்கு ஏர்பஸ் 330 ரக விமானங்கள் மூலம் எரிபொருள் நிரப்ப ஐக்கிய அரபு அமீரகம் ஏற்பாடு செய்துள்ளது. அடுத்த மாதம், 5வது கட்டமாக 9 ரபேல் விமானங்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட உள்ளன.

Related Stories: