ரூ.6.84 கோடி கடன் வாங்கி மோசடி நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா மீது குற்றப்பத்திரிக்கை: பெங்களூரு நீதிமன்றத்தில் தாக்கல்

பெங்களூரு: ஆட் பியூரோ நிறுவனத்திடம் ரூ.6.84 கோடி கடன் வாங்க பரிந்துரை செய்தபோது வழங்கிய ஆவணங்கள் போலியானது என்ற வழக்கு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் மனைவிக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகள் இயக்கிய படம் கோச்சடையான். இந்த படத்தை மீடியா ஒன் குளோபல் நிறுவனம் தயாரித்தது. பணம் போதவில்லை என்றதும், மீடியா ஒன் குளோபல் நிறுவனம் கடன் வாங்க முயற்சித்தது. இதற்காக நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதாவிடம் மீடியா ஒன் குளோபல் நிறுவனம் உதவி கேட்டது. அதற்கு லதா ரஜினிகாந்த், பல்வேறு ஆவணங்களை கொடுத்து, ஆட் பியூரோ என்ற நிறுவனத்திற்கு பரிந்துரை செய்தார். லதா வழங்கிய ஆவணங்களை ஏற்று கொண்டு, ஆட் பியூரோ நிறுவனம் ரூ.6.84 கோடி கடன் வழங்கியது.

காலப்போக்கில் அந்த கடனை திரும்ப செலுத்த முடியாமல் மீடியா ஒன் குளோபல் நிறுவனம் திணறியது. இது குறித்து லதா ரஜினிகாந்திடம் கேட்டபோது, அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆட் பியூரோ நிறுவனம், ‘‘லதா ரஜினிகாந்த் வழங்கிய ஆவணங்கள் அனைத்தும் போலியானது. இதனால் எங்களுக்கு ரூ.6.84 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பணத்தை லதா ரஜினிகாந்த் வழங்கவேண்டும்’’ என்று பெங்களூரு அல்சூர்கேட் போலீசில் புகார் அளித்தது. போலீசார் லதா ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை பெங்களூரு 2வது ஏ.சி.எம்.எம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று போலீசார் தரப்பில் வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories: