சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் லேசாக நகர்ந்தது: 6வது நாளாக மீட்பு பணி

சூயஸ்: எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரை தட்டி நிற்கும் ராட்சத சரக்கு கப்பல், பல்வேறு மீட்பு நடவடிக்கையின் மூலம் லேசாக நகர்ந்துள்ளது. சரக்கு போக்குவரத்து கடல்வழிப் பாதையில் உலகின் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் எகிப்தின் சூயஸ் கால்வாயில் கடந்த 23ம் தேதி ஜப்பான் நாட்டை சேர்ந்த ராட்சத சரக்கு கப்பல் தரை தட்டி நின்றது. இதனால், கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதித்துள்ளது. இந்த கப்பலை மீட்க, 6வது நாளாக நேற்றும் மீட்பு பணிகள் நடந்தன. ஏற்கனவே, கப்பல் தரை தட்டிய இடத்தில் இருந்து 20 ஆயிரம் டன் மணல் அகற்றப்பட்டுள்ளது. 14 இழுவை கப்பல்கள் கொண்டு கப்பலை நகர்த்தும் முயற்சிகள் நடக்கின்றன. இப்பணிகளின் மூலமாக கப்பல் 30 டிகிரி கோணத்தில் லேசாக நகர்ந்துள்ளது. இது நம்பிக்கை தரும் விஷயம் என்றாலும் கப்பல் எப்போது மீட்கப்படும் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. கப்பலை மீட்கும் பணிக்காக நேற்று மேலும் 2 பிரமாண்ட இழுவை படகுகள் சூயஸ் நோக்கி விரைந்துள்ளன. இதனால், எந்நேரத்திலும் கப்பல் கடலில் மிதக்க விடப்படலாம் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.

* கப்பலில் 25 இந்திய ஊழியர்கள்

சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள ‘எவர் கிவன்’ கப்பல், ஜப்பானை சேர்ந்த ஷோய் கிசென் நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த கப்பலில் உள்ள 25 பணியாளர்களும் இந்தியர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. மேலும், எகிப்து நாட்டை சேர்ந்த 2 மாலுமிகளும் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக கப்பல் நிர்வாகம் கூறியுள்ளது.

Related Stories: