ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ராணுவ வீரர் வீரமரணம்

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரில் 2 முக்கிய தீவிரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டுக் கொன்றது. இது குறித்து காஷ்மீரின் ஐஜி விஜயகுமார் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் உள்ள வங்கம் பகுதியில் நேற்று முன்தினம் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படைக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவனான இனாத்துல்லா ஷேக், சோபியன் மாவட்டத்தை சேர்ந்தவன். ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த இவன், கடந்த 2018ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெற்று கடந்த வாரம்தான் காஷ்மீருக்கு திரும்பி இருக்கிறான். இதேபோல், அனந்த நாக் பகுதியை சேர்ந்த அதில் மாலிக் என்பவன் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு வந்துள்ளான். இந்த துப்பாக்கி சண்டையில் ஹவில்தர் பிங்கு குமார் என்ற ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். மற்றொரு வீரர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: