திருவனந்தபுரம்: சிபிஐ உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளுக்கு எதிராக நீதி விசாரணை நடத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தியது, வெளிநாட்டுக்கு டாலர் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளை சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை, சுங்க இலாகா உள்பட மத்திய விசாரணை அமைப்புகள் விசாரித்து வருகின்றன. இவை கேரள அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதாக முதல்வர் பினராய் விஜயன் குற்றம்சாட்டி வருகிறார். டாலர் கடத்தல் வழக்கில் இவரையும் சேர்க்க சதி செய்ததாக, சமீபத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.