புதுடெல்லி: ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 29ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 8ம் தேதி வரை இத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற இருந்தது. பிப்ரவரி 1ம் தேதி மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பின்னர், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் முதல் கட்டத் தொடர் முன்கூட்டியே முடிக்கப்பட்டது. பட்ஜெட் தொடரின் 2ம் கட்ட கூட்டம், கடந்த 8ம் தேதி தொடங்கியது. இது, ஏப்ரல் 8ம் தேதி வரையில் நடத்தப்பட இருந்தது. ஆனால், 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருவதால், அவையை நடத்தவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.