தங்கம் கடத்தல் வழக்கை முடக்க கேரள அரசு சதி: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனு

திருவனந்தபுரம்: கேரளாவில் நடக்கும் தங்கம் கடத்தல் வழக்கை முடக்க சதி நடப்பதாக கேரள உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை  வழக்கு ெதாடர்ந்துள்ளது. கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் தொடர்புடைய சொப்னாவுக்கு டாலர் கடத்திய  வழக்கிலும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே, சில  மாதங்களுக்கு முன்பு சொப்னாவின் ஆடியோ  சமூக வலை தளங்களில் வைரலானது.  அதில், டாலர் கடத்திய வழக்கில் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கும் தொடர்பு  இருப்பதாக கூறும்படி, தன்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாக கூறியிருந்தார். இதையடுத்து,  டாலர் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராய் விஜயனை சிக்கவைக்க சதி செய்வதாக குற்றம்சாட்டி, அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார்  சில தினங்களுக்கு முன் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நேற்று வழக்கு தொடர்ந்தது. அதில், ‘தங்கம்  கடத்தல் வழக்கை முடக்க அரசியல் ரீதியாகவும், முக்கிய அதிகாரிகளை  பயன்படுத்தியும் கேரள அரசு  சதித்திட்டம் தீட்டி உள்ளது. ேநர்மையான விசாரணை நடத்த  வழக்கை சிபிஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும். அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கேரள  குற்றப்பிரிவு போலீஸ் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்,’  என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: