சிக்கப்பள்ளாபுராவில் கிராம பஞ்சாயத்து செயலாளர் அரிவாளால் வெட்டி கொலை

பெங்களூரு: சிக்கப்பள்ளாபுரா மாவட்டம் ஆவல நாகேனஹள்ளி பகுதியில் விடுமுறைக்கு சொந்த ஊர் வந்த கிராம பஞ்சாயத்து செயலாளரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு நகரம் பண்டேகொடிகேனஹள்ளி கிராம பஞ்சாயத்து செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் ஏ.சி ராம ஆஞ்சநேயா. இதற்கு முன்னதாக இவர் பரேசந்திரா, பாகேபள்ளி ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் செயலாளராக பணியாற்றியுள்ளார். தற்போது தான் பண்டேகொடிகேனஹள்ளி கிராம பஞ்சாயத்து செயலாளராக பொறுப்பு கிடைத்தது. இந்நிலையில் விடுமுறையை கழிப்பதற்காக அவுலநாகேனஹள்ளி பகுதியில் உள்ள தோட்டத்திற்கு தனது மனைவி மஞ்சுளாவுடன் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று ராமஆஞ்சநேயாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கும்பலை சேர்ந்தவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, ராம ஆஞ்சநேயா மற்றும் அவரது மனைவி மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சிக்கப்பள்ளாபுரா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராம ஆஞ்சநேயா உயிரிழந்தார். மஞ்சுளா சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் எதற்காக இந்த கொலை நடந்தது என்பது தெரியவில்லை. முன்விரோதமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்துள்ளனர். இது குறித்து குடிபண்டே போலீசார் வழக்கு பதிவு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: