திருப்போரூர் அருகே நாவலூரில் பறக்கும்படை சோதனையில் 80 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்

செங்கல்பட்டு: திருப்போரூர் அருகே நாவலூரில் பறக்கும்படை சோதனையில் 80 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை விசாரணை நடத்துகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாவலூர் சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி வேனை மடக்கி சோதனையிட்டதில் உள்ளே 80 கிலோ தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது.

அந்த வாகனத்தில் தங்கக்கட்டிகள் கொண்டுவரும் போது அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் திருப்போரூரில் உள்ள தேர்தல் தலைமை அலுவலகத்திற்கு தற்போது கொண்டு சென்றுள்ளனர். இந்த தங்கக்கட்டிகளானது தனியார் நகைக்கடைக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் வாகனத்துடன் தங்கக்கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: