புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் பிரசாரத்தை துவங்கியுள்ளனர். அதேபோல், அரசியல் கட்சியினர் வீடு, வீடாக பணம் பட்டுவாடாவை செய்யும் பணியையும் தொடங்கி விட்டனர். இதனை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காமராஜர் நகர் தொகுதிக்கு உட்பட்ட லாஸ்பேட்டை சாமிபிள்ளைதோட்டம் அணைக்கரைமேடு மாரியம்மன் கோயில் வீதியில் ஒரு நபர், வாக்காளர்களுக்கு வீடு, வீடாக சென்று ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக ஓட்டு போடக்கூறி பணம் பட்டுவாடா செய்வதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.