மு.க.ஸ்டாலினை முதல்வராக்க தமிழக மக்கள் எழுச்சியாக உள்ளனர்: திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் பேச்சு

கூடுவாஞ்சேரி: மு.க.ஸ்டாலினை முதல்வராக்க தமிழக மக்கள் எழுச்சியாகவும், உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவும் தயாராகவும் உள்ளனர் என செங்கல்பட்டு தொகுதி திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் நேற்று தொடங்கிய முதல் பிரசார கூட்டத்தில் பேசினார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் நெடுங்குன்றம் ஊராட்சியில் உள்ள சதானந்தபுரம், ஆலப்பாக்கம் மற்றும் நெடுங்குன்றம் ஆகிய கிராமங்களில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வரலட்சுமி மதுசூதனனை ஆதரித்து முதல் தேர்தல் பிரசாரம் நேற்று தொடங்கியது.

காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வி.எஸ்.ஆராமுதன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஏ.ஜே.ஆறுமுகம், டி.குணசேகரன்,  நெடுங்குன்றம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோ.ஆறுமுகம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஏவிஎம்.இளங்கோவன், முன்னாள் அமைப்பாளர் பிரகாஷ், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் கருணாகரன், மகளிரணி அமைப்பாளர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட எனக்கு உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்து வைத்தமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தற்போது நான் 2வது முறையாக போட்டியிடுகிறேன். நான் பதவி வகித்த கடந்த 5 ஆண்டுகளில் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதிலும், செங்கல்பட்டு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், சிறுவர் பூங்கா உள்பட பல்வேறு வசதி வாய்ப்புகளை செய்து கொடுத்துள்ளேன்.

வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் பொதுமக்கள் கொடுத்த அனைத்து மனுக்கள் மீதும் 100 நாட்களில் நடவடிக்கை எடுப்பேன்.  மேலும் தற்போது தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க தமிழக மக்கள் எழுச்சியாகவும், உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க தயாராகவும் உள்ளனர்.  எனவே செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் 2வது முறையாக போட்டியிடும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றார். இதில் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஜேபிவிஸ்.சதீஷ், வி.கே.பிரபு, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் தீபன்மாணிக்கம் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: