திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஓராண்டுக்குப் பின்னர் ரூ5.21 கோடி காணிக்கை: வாரி வழங்கிய பக்தர்கள்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஓராண்டில் அதிகபட்சமாக ஒரேநாளில் ரூ5.21 கோடியை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தினர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப கோயிலில் உள்ள பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள வாரி உண்டியலில் பணம் மற்றும் நகைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். சிலர் கோயிலுக்கு பணம் மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கி வருகின்றனர். மேலும், பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் 52 ஆயிரத்து 87 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதில், 25 ஆயிரத்து 466 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். மேலும், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. அதில், ஒரேநாளில் ரூ5.21 கோடி காணிக்கையாக கிடைத்தது. கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு திருப்பதியில் பக்தர்கள் வருகையும், காணிக்கையும் குறைந்திருந்தது. அதன்படி கடந்த ஓராண்டில் அதிகபட்சமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் ₹5.21 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: