சென்னை: அகில இந்திய சென்னை வானொலி நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை ஒட்டி அகில இந்திய வானொலியிலும், பொதிகை தொலைக்காட்சியிலும் அரசியல் கட்சிகளின் தேர்தல் ஒலிபரப்பிற்கு நேர ஒதுக்கீடு செய்வதற்கான குலுக்கல் நேற்று முன் தினம் (17ம் தேதி) மாலை 4:30 மணிக்கு சென்னை தொலைக்காட்சியில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு முன்னிலையில் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகளின் பிரநிதிகளும் சென்னை வானொலியின் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவர் பிரபஞ்சம் பாலசந்திரன், பொதிகை தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பிரிவுத்தலைவர் சையத் ரபீக் பாஷா உசைனி ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021க்கான அரசியல் கட்சிகளின் தேர்தல் ஒலிபரப்பிற்கு அகில இந்திய வானொலியில் 1980 நிமிடங்களும், பொதிகை தொலைக்காட்சியில் 1980 நிமிடங்களும் தனித்தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. கோவிட்-19 நோய் தொற்றினைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகளுக்கான பிரசார நேரத்தை இருமடங்காக்கி இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.