துரோக கட்சியான அதிமுகவை விழ்த்துவதே எங்களது நோக்கம்; அம்மா ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைப்பதுதான் இலக்கு: டிடிவி தினகரன் பேட்டி

சென்னை: அம்மா ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைப்பதுதான் அமமுக தலைமையிலான கூட்டணியின் இலக்கு என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் பிரச்சினை காரணமாக அக்கூட்டணியில் இருந்து விலகி அமமுகவில் சேர்ந்தது. தற்போது அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

முதல்வர் வேட்பாளராக டிடிவி தினகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்குச் சென்ற டிடிவி தினகரன், அங்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். பின்னர் தேமுதிக அலுவலகத்தில் டிடிவி தினகரன், சுதீஷ், தெஹ்லான் பாகவி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய அவர்கள்; சர்ச்சையின்றி சுமுகமாக கூட்டணி அமைத்துளோம். விஜயகாந்தின் ஆசீர்வாதம் வாங்கவே நேரில் சந்தித்தேன். சசிகலாவின் மானசீக ஆதரவு எண்கள் கூட்டணிக்கு உள்ளது.

தமிழக மக்களுக்கு நன்மை தர தேமுதிகவுடன் அமமுக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழகம் முழுவதும் அமமுகவுக்கு வலுவான கூட்டமைப்பு உள்ளது. சில தொகுதிகளை தேமுதிக வேட்பாளர்களுக்காக வீட்டுக் கொடுத்துளோம். தேமுதிக கூட்டணிக்காக 42 அமமுக வேட்பாளர்கள் முழு மனதுடன் வாபஸ் பெற்றனர். காவிரி டெல்டா மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அமமுகவிற்கு தொண்டர்கள் உள்ளனர். 7 லட்சம் கோடி கடனை வைத்துக் கொண்டு வெற்றிநடை போடுகிறது என விளம்பரம் செய்வதா?

வெற்று வாக்குறுதிகள், மக்களை ஏமாற்றும் வாக்குறுதிகள் நடைமுறைக்கு சாத்தியமற்றது. துரோக கட்சியான அதிமுகவை விழ்த்துவதே எங்களது நோக்கம். அம்மா ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைப்பதுதான் அமமுக தலைமையிலான கூட்டணியின் இலக்கு எனவும் கூறினார்.

Related Stories: