உத்யோக்விஹார் மெட்ரோ அருகே பைக் மீது ஸ்கூட்டி மோதியதில் 2 வாலிபர்கள் படுகொலை: சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு

புதுடெல்லி: உத்யோக்விஹார் மெட்ரோ ரயில் நிலையம் அருகே தெருவில் நடந்த இரட்டைக்கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி உத்யோக்விஹார் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள மக்கள் குடியிருக்கும் வீதியில் நள்ளிரவு ரோகித் அகர்வால்(23), கன்சியாம்(20) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். அதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த சிசிடிவி காட்சிகள் விவரம் வருமாறு: ரோகித் அகர்வால், கன்சியாம் ஆகியோர் ஸ்கூட்டியில் தெருவில் வருகிறார்கள். அப்போது இரண்டு பைக்கில் வந்த 4 பேர் மீது ஸ்கூட்டி மோதியது. இதுதொடர்பாக வாக்குவாதம் நடக்கிறது.

அது கைகலப்பாக மாறுகிறது. அப்போது ரோகித் மற்றும் கன்சியாமை 4 ேபர் கும்பல் சரமாரியாக தாக்குகிறார்கள். அதில் ஒருவர் சரமாரியாக அடித்து, உதைப்பதோடு, கையில் வைத்திருந்த கத்தியால் குத்துகிறார். இதில் ஒருவர் பின் ஒருவராக ரத்த வெள்ளத்தில் கீழே சரிகிறார்கள். குடியிருப்பு பகுதியாக இருந்தும் யாரும் அங்கு கதவை திறக்கவில்லை. இரண்டு பேரும் தெருவில் உயிருக்கு போராடுகிறார்கள். அப்போது 4 பேர் கும்பல் தாங்கள் வந்த பைக்கில் சாவகாசமாக, எந்தவித பயமும் இல்லாமல் நிதானமாக செல்கிறார்கள். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்தன. 4 பேர் கும்பல் சென்ற பின்னர் மக்கள் போலீசுக்கு தகவல் கொடுக்கிறார்கள்.

போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை சோதித்த போலீசார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து இரண்டு பேரை கைது செய்தனர். அதில் ஒருவன் பெயர் பிரதீப் கோலி(19), மற்றொருவன் சிறுவன் ஆவார். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள். விசாரணையில் பைக் மீது ஸ்கூட்டி மோதியதால் அவர்களை கொன்றதாக தெரிவித்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: