கம்பம் 9வது வார்டில் அசுர வேக டூவீலர்களால் அடிக்கடி விபத்து

கம்பம் : கம்பம் 9வது வார்டில் டூவீலர்களை அசுர வேகத்தில் ஓட்டி செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கம்பம் பகுதியில் புறநகர் சாலை அமைப்பதால் கம்பமெட்டு அடிவாரம் வரை ஊர் பெருகி செல்கிறது. இந்த பைபாஸ் சாலையையொட்டி உள்ள தாத்தப்பன்குளம், காட்டுப்பள்ளி வாசல் ரோடு, உதயம் நகர் போன்ற பகுதிகள் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்வோர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.

குறிப்பாக டூவீலரில் செல்வோர் அதிக வேகத்துடனும், கவனமற்ற நிலையிலும் டூவீலர்களை ஓட்டி செல்கின்றனர். குறிப்பாக குடியிருப்புகள் அதிகமுள்ள தாத்தப்பன்குளம் 9வது வார்டு 13வது தெருவில் டூவீலரில் செல்வோர் அதிக வேகத்துடன் செல்வதால் தினமும் விபத்துகள் நடக்கின்ன. லைசென்ஸ் இல்லாத சிறார்களும் டூவீலர்களை அதிவேகத்தில் ஓட்டுவதால் விபத்துகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே இப்பகுதியில் வாகனங்களின் வேகத்தை குறைக்க உடனே வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: