துபாய்: கொரோனா 2வது அலை காரணமாக லார்ட்ஸ் அரங்கில் ஜூன் மாதம் நடைபெற இருந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் சவுத்தாம்ப்டனுக்கு மாற்றப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐசிசி அறிமுகம் செய்துள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதை நியூசிலாந்து அணி உறுதி செய்துவிட்ட நிலையில், அதனுடன் மோதப்போகும் 2வது அணி எது என்பதை இந்தியா - இங்கிலாந்து அணிகளிடையே நடந்த டெஸ்ட் தொடரின் முடிவு நிர்ணயித்தது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் மோசமாகத் தோற்றாலும், பின்னர் சுதாரித்துக் கொண்டு அபாரமாக விளையாடிய இந்தியா ஹாட்ரிக் வெற்றியுடன் 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியதுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது.