பண்ருட்டி: மக்கள் நீதி மையம் கூட்டணிக்கு செல்ல மாட்டோம். தேமுதிக 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடும், திமுக ஆட்சிக்கு வந்தால் மகிழ்ச்சியே என பண்ருட்டியில் நடந்த கூட்டத்தில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேசினார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கட்சி தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு பேசியதாவது: ஜெயலலிதா அன்று எங்களுக்கு இறங்குமுகம் என்று கூறினார். ஆனால் அதிமுகவிற்கு இன்று முதல் இறங்குமுகம் ஆரம்பம். தேமுதிகவுக்கு என்று தன்மானம் உள்ளது. அதிமுக, பாமக நிறுத்தும் வேட்பாளர்களை டெபாசிட் இழக்க கட்சி கடுமையாக பாடுபடும். விஜயகாந்த் அரசியலிலிருந்து ஒதுங்கி விடுவார் என்ற பலரின் கனவு பலிக்காது. அதிமுக கூட்டணியில் தலைமை சரியில்லை. விஜயகாந்துக்கு எப்போதும் கொடுத்துதான் பழக்கம். அதிமுகவினர் கூட்டணி விஷயத்தில் எங்களுக்கு உரிய மரியாதை தரவில்லை. முதல்வர் எடப்பாடி போட்டியிடும் தொகுதியிலேயே மண்ணை கவ்வ போகிறார். இனி என்னுடைய ஆட்டம் ஆரம்பம். பட்டி தொட்டிகளில் இனி எங்கள் கட்சி கொடி அதிகமாக பறக்கும்.