பட்டா, சாதி சான்றிதழ்கள் கேட்டு திங்கட்கிழமை வழக்கம்போல் மனு கொடுக்க வந்த பெண்கள்

நெல்லை :  தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தும் கூட ஏராளமான பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்து மனுக்களை நேற்று அளித்தனர்.நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடப்பது வழக்கம். இதற்கு மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வருவர். இந்நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியானதால், நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதன்படி கலெக்டரின் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும் கடந்த இரு வாரங்களாக பல்வேறு கிராமங்களில் இருந்து தங்கள் பிரச்னைகளோடு பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்து செல்கின்றனர். நேற்று அன்பு சுவரை ஒட்டிய பகுதிகளில் மனு எழுத பலரும் வரிசையில் இருந்த நிலையில், பெண்கள் பட்டா மற்றும் சாதி சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை எழுதி கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட்டுவிட்டு சென்றனர்.

கலெக்டர் அலுவலக வாசலில் நின்ற பாதுகாப்பு போலீசார், மனு அளிக்க வந்த யாரையும் உள்ள செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தினர். தாலுகா அலுவலகம் மற்றும் ஆதார் மையத்திற்கு செல்லும் நபர்களை மட்டுமே உள்ளே அனுப்பி வைத்தனர்.

Related Stories: