சென்னை: அமமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு வினியோகம் கடந்த 3ம் தேதி தொடங்கி 7ம் தேதியுடன் முடிடைந்தது. மொத்தம் 5 நாட்கள் நடைபெற்ற இதில் 4,191 பேர் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து வழங்கினர். இந்தநிலையில், விருப்ப மனு வழங்கியவர்களுக்கான நேர்காணல் அமமுக தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று திருவள்ளூர், சென்னை, திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் ஆட்சிமன்றக்குழு தலைவர் ஆர்.ஆர்.முருகன், உறுப்பினர்கள் சுகுமார், பாலசுப்ரமணி, கோதண்டபாணி, டேவிட் அண்ணாதுரை, செங்கொடி, அப்துல் நபில் ஆகியோர் நேர்காணலை நடத்தினர்.