சென்னை: திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திருவொற்றியூர் தேரடி சந்திப்பில் அவர் முதல் பிரசாரத்தை நேற்று மாலை 8 மணிக்கு தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் எத்தனையோ தொகுதிகள் இருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு ஏன் திருவொற்றியூர் தொகுதியை தேர்ந்தெடுத்தேன். அனல் மின்நிலையத்தை உருவாக்கி உலர் சாம்பலைக் கொட்டி, என் இனம் சாம்பலாயிற்று. வாழ்வாதாரம் போய் வாழ்விடமும் போயிற்று. அதானி என்ற ஒற்றை முதலாளிக்கு 6 ஆயிரத்து 116 ஏக்கர் நிலத்தை காட்டுப்பள்ளியில் எடுத்துக் கொடுக்கிறது, இந்த அரசு. பாஜ, அதிமுக அரசுகள், நாட்டு பாதுகாப்பை விட, மக்களின் நலனை விட ஒற்றை முதலாளியின் நலனே மேலோங்கி இருக்கிறது. இதை எதிர்த்து, துணிவோடு சமரசம் இல்லாமல் ஒரே மகன் பிரபாகரனின் தம்பி உங்கள் பிள்ளை நிற்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.