ஜெயங்கொண்டம் : ஜெயங்கொண்டம் பகுதியில் மீண்டும் கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் விதிகளை மீறிய 6 கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தனர்.அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி அரியலூர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள மாவட்டங்களில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிப்பதன் காரணமாக கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவதில் மக்கள் காட்டும் அலட்சியமாக உள்ளனர், திருமணம் போன்ற குடும்ப நிகழ்வுகள், திருவிழாக்களில் பங்கேற்பதில், பயணங்கள் மேற்கொள்வதில் கட்டுப்பாடு இல்லாத நிலை தொடர்கிறது.
பொதுஇடங்களில் மக்கள் கூடுவது அதிகரித்து வருவதும் கொரோனா தொற்றின் வேகத்தை அதிகரித்து வருகிறது. எனவே அரியலூர் மாவட்டத்தில் பாதிப்பு குறைவாக இருப்பினும் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் அபராதம் விதித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அதனடிப்படையில் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நோய்தொற்று பரவலை தடுக்கும் விதமாக முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளி பின்பற்றாத, சானிடைசர் கிருமிநாசினி பயன்படுத்தாத மற்றும் வெப்பமானி (தெர்மல் ஸ்கேனர்) உபயோகிக்காத கடைகள் வணிக நிறுவனங்களை ஆய்வு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.
21 கடைகளில் ஆய்வு செய்ததில் 6 கடைகளுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றப்படாதது கண்டறியப்பட்டு ரூ.5 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து விதிமீறல்கள் ஏற்பட்டால் கடைகள் மூடி சீல் வைக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது. இவ் ஆய்வின்போது நகராட்சி ஆணையர் (பொ) சிவராமகிருஷ்ணன் மற்றும் வருவாய் உதவியாளர் சரஸ்வதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.