மத்திய பாஜ அரசுக்கான தலையாட்டி பொம்மைகள்: ஓபிஎஸ், இபிஎஸ் மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சிங்கம்புணரி: பாஜகவின் தலையாட்டி பொம்மைகளாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளனர் என்று சிங்கம்புணரியில் நடந்த காங்கிரஸ் பூத் கமிட்டி கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் கட்டுகுடிபட்டியில் காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் தலைமை வகித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: வரும் சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறவேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நமது கூட்டணி 39 இடங்களில் 38 இடங்களில் வெற்றி பெற்றோம்.

அந்த கணக்கின் படி இந்த சட்டமன்ற தேர்தலில் 208 இடங்களில் வெற்றி பெற வேண்டும். மத்திய பாஜக அரசின் தலையாட்டி பொம்மையாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளனர். பட்ஜெட் கூட்டம் முடிந்து தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு, திடீரென மகளிர் சுயஉதவிகுழு ரத்து, 6 பவுன் நகை கடன் ரத்து என முதல்வர் அறிவித்துள்ளார். இன்னும் சில மணிநேரம் இருந்தால் மளிகை கடன், கைமாத்து கடன் ரத்து என்றும் அறிவித்திருப்பார். பாஜக மதவாத சக்தி, மொழிக்கு எதிரானவர்கள். அவர்களை இத்தேர்தலில் காலூன்ற விடாமல் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: