20ல் ஒரு இடத்தில் கூட பாஜ வெற்றி பெறாது: ப.சிதம்பரம் உறுதி

காரைக்குடி:  தேர்தலில் பாஜ போட்டியிடும் 20 இடங்களில் ஒன்றில் கூட வெற்றி பெறாது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: பாஜ என்ற நச்சு இயக்கம், விஷ செடி மேலும் பரவக்கூடாது. தமிழகத்தில் அவர்கள் கால் ஊன்றக்கூடாது. பாஜவுக்கு அதிமுக அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டது. 20 இடங்களில் அவர்களுக்கு போட்டியிட வேட்பாளர்கள் கூட கிடையாது. மிருக பணபலம், அதிகார பலத்தை வைத்து தொகுதியை வாங்கி உள்ளனர்.

அவர்கள் எந்த இடத்திலும் வெற்றி பெற மாட்டார்கள். வெற்றி பெற விடக்கூடாது. சர்வாதிகார, மோசமான சக்தி தமிழகத்தில் உள்ளே நுழைந்து விடக்கூடாது. தமிழர்கள் மீது இந்தியை திணிக்க நினைக்கின்றனர். பாஜ போட்டியிடும் அனைத்து இடங்களுக்கும் பிரசாரத்துக்கு செல்வேன். பாஜவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியாக எதிர்க்கிறார். இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். தமிழர்களின் தன்மானத்தை உயர்த்தி பிடிப்பவர்களை ஆட்சியில் அமர வைக்க வேண்டும். தபால் ஓட்டுகளில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. மூன்றாவது அணி மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: