குந்தா பகுதியில் வறட்சியால் கருகிய தேயிலை செடிகள்: கவாத்து செய்வதில் விவசாயிகள் தீவிரம்

மஞ்சூர்:  குந்தா பகுதியில் வறட்சியால் தேயிலை தோட்டங்களில் செடிகள் காய்ந்து கருகி போனதை தொடர்ந்து கவாத்து செய்வதில்  விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் முக்கியத் தொழிலாக தேயிலை விவசாயம் மட்டுமே உள்ளது. சுமார் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு  விவசாயிகள் தேயிலை தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை முன்னிட்டு குந்தா பகுதியில் மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி,  மகாலிங்கா, இத்தலார், நஞ்சநாடு, மேற்குநாடு உள்ளிட்ட 9கூட்டுறவு ஆலைகளும் ஏராளமான தனியார் மற்றும் எஸ்டேட் தொழிற்சாலைகள் இயங்கி  வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் பனி விழத் துவங்கி 4 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. டிசம்பர் மற்றும் ஜனவரியில் உறைபனியின்  தாக்கமும் அதிகரித்தது.

இதனால் குந்தா பகுதியை சுற்றிலும் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த தேயிலை செடிகள் கருகியது. இதனால் பசுந்தேயிலை வரத்து  பலமடங்கு குறைந்தது. மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் உள்ள பெரும்பாலான கூட்டுறவு தொழிற்சாலைகளிலும் கடந்த சில தினங்களாக நாளொன்றுக்கு  வெறும் 7 ஆயிரம் கிலோ முதல் 8ஆயிரம் கிலோ வரை மட்டுமே பசுந்தேயிலை வரத்து உள்ளதால் தேயிலைதுாள் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.  பெரும்பாலான கூட்டுறவு ஆலைகளில் பசுந்தேயிலை வரத்து

குறைந்துள்ளதை தொடர்ந்து இயந்திரங்கள் பராமரிப்பு, மின்கட்டணம், எரிபொருள்  உள்ளிட்ட பல்வேறு செலவினங்களை கருத்தில் கொண்டு தேயிலை உற்பத்தி இரண்டு மற்றும் மூன்று நாட்களுக்கொருமுறை என மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. இந்நிலையில் குந்தா பகுதியில் உள்ள பெரும்பாலான தேயிலை தோட்டங்களிலும் செடிகள் காய்ந்து கருகி போய் காட்சியளிக்கிறது.  இலைகள் இல்லாமல் காம்புகள் அனைத்தும் குச்சிகளாக மாறி போயுள்ளது. இதையடுத்து பெரும்பாலான விவசாயிகளும் தங்களது தோட்டங்களில்  செடிகளை கவாத்து செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories: