கோவை-மஞ்சூர் சாலையில் குட்டிக்கு காவலாக நின்ற யானைகள்: போக்குவரத்து பாதிப்பு

மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. இப்பகுதியில், 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்  முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் மாலை கெத்தையில் குட்டியுடன் தாய் யானை உள்பட இரண்டு யானைகள் சாலையோரம் இருந்த செடி, கொடிகளை பிடுங்கி தின்று கொண்டிருந்தது. அப்போது, களைப்படைந்த யானை குட்டி நடு ரோட்டில் படுத்து விட்டது. இதைத்தொடர்ந்து அதன் தாயும் மற்றொரு யானையும் குட்டிக்கு காவலாக அதன் அருகிலேயே நின்றன. இதனால், அவ்வழியாக இரண்டு வாகனங்களில் திருமண கோஷ்டியினர் கோவைக்கு சென்று கொண்டிருந்தனர்.

ஆனால், வழியை மறித்தபடி  நடுரோட்டில் குட்டி யானை படுத்திருப்பதையும், அதன் அருகில் இரண்டு யானைகள் நிற்பதை கண்டு திருமண கோஷ்டியினர் தங்களது வாகனங்களை சாலையோரமாக நிறுத்தினர். மேலும், மஞ்சூர் மற்றும் கோவை பகுதிகளில் இருந்து சென்ற வாகனங்களும் ஓரமாக நிறுத்தப்பட்டன. சுமார் 1 மணி நேரத்திற்குபின் குட்டி யானையும் மற்ற யானைகளும் காட்டு பகுதிக்கு சென்றன. இதையடுத்து, வாகனங்கள் அனைத்தும் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.

Related Stories: