லாலு கட்சிக்கு என்ன வேலை?

லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் பீகாரின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. சிறை தண்டனையில் லாலு இருப்பதால், அவரது மகன் தேஜஸ்வி கட்சியை நிர்வகித்து வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகவும் களமிறங்கியதால், நம்பிக்கைக்குரிய இளம் அரசியல் தலைவராகவும் உருவெடுத்துள்ளார். இதன் அடுத்தகட்டமாக அசாமிலும் கால் பதிக்கும் முயற்சியை செய்து வருகிறார் தேஜஸ்வி. சமீபத்தில் கவுகாத்தி சென்றவர், அங்கு காங்கிரஸ் தலைவர் ரிபுன் போராவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசியவர், ‘ஒருமித்த கருத்துகொண்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவோம்’ என்றார். அசாமில் லாலு கட்சிக்கான உள்கட்டமைப்பு வசதிகளோ, உறுப்பினர்களோ இல்லை. பிறகு எப்படி இந்த தேர்தல் தைரியம் வந்தது என்று எல்லோரும் இதுபற்றி விவாதித்துக் கொண்டுள்ளனர். ‘விஷயம் வேறு ஒன்றும் இல்லை… பீகார் உள்ளிட்ட இந்தி பேசும் மாநில வாக்காளர்கள், அசாமில் 5 சதவிகிதம் உள்ளனர். தேஜஸ்வியின் முடிவுக்கு இந்த 5 சதவிகிதக் கணக்குதான் காரணம்’ என்று அரசியல் வல்லுநர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

* பரிதாப நிலையில் காங்.-கம்யூ. கூட்டணி

மேற்கு வங்கத்தில் ஒருகாலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி இன்று அதலபாதாளத்தில் தவித்துக் கொண்டிருக்கிறது. மம்தாவின் அசுர வளர்ச்சியால் வேறு வழியின்றி காங்கிரசும், கம்யூனிஸ்ட்டும் கைகோர்த்தும் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியவில்லை. இவ்விரு கட்சிகளின் வாக்கு சதவீதம் கடந்த 5 தேர்தலாக ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான’ கதையாக சுருங்கிக் கொண்டிருக்கிறது. 2016 சட்டப்பேரவை தேர்தலில் முதல் முறையாக சேர்ந்த இந்த கூட்டணி அப்போது தோல்வியில் முடிந்தது.

த்தேர்தலில் 294 தொகுதிகளில் 71 சீட் வென்றன. 38 சதவீத வாக்கை மட்டுமே பெற்றனர். 2006ல் கம்யூனிஸ்ட்டுக்கு மட்டும் 50% வாக்கும், காங்கிரசுக்கு 16% வாக்கும் இருந்தது. இது 2011ல் கம்யூனிஸ்ட்டுக்கு 41%, காங்கிரசுக்கு 9% என்றும் 2016ல் கம்யூனிஸ்ட்டுக்கு 26%, காங்கிரசுக்கு 12% என சுருங்கியது. 2019 மக்களவை தேர்தலில் பெற்ற வாக்கு சதம் கம்யூனிஸ்ட் 8%, காங்கிரஸ் 6% மட்டுமே. இதுவே பாஜ பெற்ற வாக்கு சதவீதம் 40%. ஆளும் திரிணாமுல் 43%. எனவே பரிதாப கதியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணியால் இம்முறையும் பெரிய மாற்றத்தை தர முடியுமா என்பது சந்தேகமே!

* நெல்லித்தோப்பு குழப்பம் அதிமுக, பாஜ.வில் சிக்கல்

தமிழகத்தை போலவே புதுவையிலும் அதிமுகவுடன் பாஜ. கூட்டணி அமைத்துள்ளது. காரைக்காலில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘புதுவையில் பாஜ தலைமையில் ஆட்சி அமையும்,’ என்றார். அப்போது, புதுசேரியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ.க்கள் பாஜ.வில் இணைந்தனர். இதற்கிடையில், நெல்லித்தோப்பு மற்றும் காமராஜர் நகர் தொகுதிகளை வழங்கும் கட்சியில்தான் சேருவேன் என காங்கிரசில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த ஜான்குமார் கூறியிருந்தார்.

அவரும், அவரது மகனும் கூட பாஜ.வில் நேற்று இணைந்தனர். இதனால், புதுவை அதிமுக மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் ஜான் குமாருக்கும், ஓம்சக்தி சேகருக்கும் கடும் போட்டி நிலவியது. இதில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜான்குமார் வெற்றி பெற்றார். தற்போது, ஓம்சக்தி சேகருக்கு நியமன எம்எல்ஏ பதவி வழங்குவதாக ஆசை வார்த்தை கூறினாலும், அதை அவர் ஏற்கமாட்டார் என்று அவருடைய அடிபொடிகள் உறுதியாக கூறுகின்றனர். இதனால், புதுவையில் அதிமுக- பாஜ கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

* மத அரசியலை கட்டவிழ்க்கும் பாஜ

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின், கேரளாவில் பாஜ ஆட்சி அமைந்தால், திருமணத்துக்காக கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்தப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன் கூறியுள்ளார். ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக, எந்தளவு தரம் தாழ்ந்த அரசியல் செய்யவும் பாஜ தயாராக இருப்பதையே அவரது பேச்சு காட்டுவதாக அங்குள்ள எதிர்க்கட்சியினர் பாஜ.வுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர். சமீபத்தில், அங்கு அரசியல் வாரிசுக்கு பச்சை கொடி காட்டிய பாஜ, தற்போது உத்தர பிரதேசத்தைப் போல், இங்கும் மத அரசியலை கட்டவிழ்த்து விட்டு குளிர் காய நினைப்பதாகவும் எதிர்க்கட்சி வட்டாரங்கள் கூறி வருகின்றன.

Related Stories: