மதுரை -தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை அமலுக்கு வந்தவுடன், மதுரை மாவட்டத்தின் அரசு அலுவலகங்களில் இருந்த ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரின் படங்களை அதிகாரிகள் அகற்றினர்.தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ம் தேதி துவங்கி 19ம் தேதியுடன் முடிகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று மாலை அறிவித்தது. அறிவிப்பு வந்த மறுநிமிடம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன.
மதுரை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் இருந்த ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி படங்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டன. இதேபோன்று பல அரசு அலுவலகங்களில் இருந்த ஜெயலலிதா, முதல்வர் படத்தை அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டன.