சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த 20 லட்சம் பறிமுதல்: 2 பேரிடம் விசாரணை

சென்னை: விஜயவாடாவில் இருந்து பினாகினி எக்ஸ்பிரஸ்  நேற்று முன்தினம் பிற்பகல் 12.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது நடைமேடை 4ல் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்ேவ பாதுகாப்பு படையினர் மற்றும் தேர்தல் சிறப்பு படையினர் சந்தேகப்படும்படியாக வந்த 2 பேரை அழைத்து விசாரித்துள்ளனர்.  அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து, அவர்களது பையை சோதனை செய்தபோது, கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதனால், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் நெல்லை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த ஹைதர் (55) மற்றும் நெல்ைல, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், சப்பணக்கார மேற்கு தெருவை சேர்ந்த யூசுப் அலி (40) என்பதும், இவர்கள் நெல்லூரில் உள்ள பீடி கம்பெனியில் இருந்து நெல்லையில் உள்ள பீடி கம்பெனிக்கு ₹20 லட்சத்தை எடுத்துக் கொண்டு செல்வதாக கூறியுள்ளனர். ஆனால், அதற்கான ஆவணம் அவர்களிடம் இல்லாததால் இருவரையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்களிடம் வருமானத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories: