பழநி: பழநி அருகே ஆலாவலசு பகுதியில் கார் மீது டூவீலர் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். படுகாயமடைந்த சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்புச்சாமி (65). விவசாயி. நேற்று மாலை தோட்டத்து வேலைக்கு கந்தப்ப கவுண்டன்வலசிற்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பி உள்ளார். அப்போது தன்னுடன் உறவினரான மயிலாத்தாள் (65) என்பவரையும் தனது பேரன் வர்ஷன் (5) என்பவரையும் கூட்டி வந்துள்ளார். பாறைப்பட்டி பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் கருப்புச்சாமி ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த மூவரும் கீழே விழுந்தனர். இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே கருப்புச்சாமி மற்றும் மயிலாத்தாள் ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த சிறுவன் வர்ஷன் சிகிச்சைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.