தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி நாளை குமரி வருகை: மார்ச் 1 ராகுல்காந்தி சுற்றுப்பயணம் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்

நாகர்கோவில்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நாளை (21ம் தேதி) குமரி மாவட்டம் வருகை தருகிறார். காலை 10 மணிக்கு நாகர்கோவிலில் ராகுல்காந்தியின் குமரி மாவட்ட பயண திட்டம் தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஆகியன நடைபெற உள்ள நிலையில் தலைவர்கள் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து சென்றுள்ளனர்.

 இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். வரும் 27ம் தேதி தூத்துக்குடியில் இருந்து அவர் பிரசாரத்தை தொடங்குகிறார். ‘ராகுலின் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் அவரது இந்த பிரசார சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. 27ம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் அவர் அன்று தூத்துக்குடி மாவட்டத்திலும், தொடர்ந்து மறுநாள் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார். மார்ச் 1ம் தேதி குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்யும் அவர் பின்னர் திருவனந்தபுரம் வழியாக டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

ராகுல்காந்தி சுற்றுப்பயணம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மாவட்டங்களில் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் நாளை (21ம் தேதி) நாகர்கோவிலில் குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். ராகுல்காந்தியின் பயண திட்டத்தில் ரோடு ஷோ, பொதுக்கூட்டம், பொதுமக்களுடன் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் குமரி மாவட்டத்தில் நடைபெற இருக்கின்ற நிகழ்ச்சிகள் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமையில் நாகர்கோவில் பிஷப் ஹவுஸ் அருகே உள்ள ஓட்டல் லான்ஸ் இன்டர்நேஷனில் நடைபெறுகின்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் அகில இந்திய செயலாளர்கள் சஞ்ஜய் தத், வல்லபிரசாத், செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மாநில துணை தலைவர் ராபர்ட்புரூஸ், மாநில பொதுசெயலாளர் விஜய்வசந்த், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், விஜயதரணி, ராஜேஷ்குமார் உட்பட நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். ராகுல்காந்தி குமரி மாவட்ட வருகையையொட்டி அவரை வரவேற்கும் வகையில் சுவர் விளம்பரங்கள் எழுதும் பணியில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: