ஒகேனக்கல்லில் கூட்டமாக சாலையை கடக்கும் யானைகள்-சுற்றுலா பயணிகள் அச்சம்

பென்னாகரம் : கர்நாடக மாநில வனப்பகுதிகளில் வறட்சி நிலவும் போது, அப்பகுதியில் இருந்து யானை கூட்டங்கள் கிருஷ்ணகிரி மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு இடம் பெயர்ச்சி அடைவது வழக்கம். அந்தவகையில் நடபாண்டு பருவ மழையின் அளவு சற்று அதிகரித்த போதிலும், தற்போது கர்நாடக வனப்பகுதியில் வறட்சி நிலவி வருகிறது.

இதனால் அங்குள்ள யானை கூட்டங்கள், கிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு பகுதிகளில் உள்ள வயல் வெளிகளில் பயிர்களை நாசம் செய்து வந்த நிலையில், வனத்துறையினர் வனப்பகுதிக்கு விரட்டப்பட்டதால், , அங்கிருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக, கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தது.

இந்த யானைகள் வனப்பகுதியில் உள்ள மர கிளைகளை உடைத்து உணவருந்திவிட்டு, தண்ணீரை தேடி ஒகேனக்கல் கணவாய் பகுதியில் அமைந்துள்ள, தமிழ்நாடு கூட்டு குடிநீர் திட்ட வடிகால் வாரியம் எதிரே உள்ள முண்டச்சிப்பள்ளம் தடுப்பணையில் தண்ணீர் குடிப்பதற்காக, காலை மற்றும் மாலை நேரங்களில் சாலையை யானைகள் கூட்டமாக கடந்து செல்கின்றனர்.

தமிழகத்தின் முதன்மை சுற்றுலா தலமாக விளங்கும், ஒகேனக்கல் பகுதிக்கு செல்ல சுமார் 10கிலோ மீட்டருக்கும் மேலாக அடர் வனப்பகுதிக்குள் செல்வதால், மாலைவேளையில் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் செல்லும்போது, திடீரென யானைகள் சாலையை கடக்கும் ேபாது, அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்களை யானைகள் துரத்துவதால், வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.

 எனவே, ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் வனப்பகுதிக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் சாலையை கடக்கும் இடங்களில், காலை மற்றும் மாலை நேரங்களில், சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்கும் வகையில், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: