பூந்தமல்லி: விசாகப்பட்டினத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு ரசாயனங்களை ஏற்றிக்கொண்டு லாரி நேற்று முன்தினம் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம் அருகே சென்றபோது சாலையோரம் நின்றிருந்த மற்றொரு லாரியின் மீது ரசாயனம் ஏற்றி வந்த லாரி உரசியது. இதில், ஏற்பட்ட அதிர்வால் ரசாயனங்கள் கொண்டு வந்த பேரல்கள் ஒன்றோடொன்று மோதி கசியத்தொடங்கியது. இதனால் வாகனத்தில் இருந்து புகை வர ஆரம்பித்தது. இதில் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது. தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார், விரைந்து வந்து விபத்துக்குள்ளான வாகனத்தை கிரேன் உதவியுடன் தூக்கி சாலையோரம் எடுத்து வைத்தனர்.