இனி உன் பேரு புருஷோத்தமன் இல்ல... புல்லட் புருஷ்.... ஆதரவாளர்களுக்கு புதிய பெயர் சூட்டி மகிழ்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: வழுக்கையானவர்களுக்கு முடி நடவும் ஏற்பாடு

தமிழக அரசியலில் சில அமைச்சர்களை கண்டால், பொதுமக்களும் நிருபர்களும் குஷியாகிவிடுவார்கள். ஏனென்றால், அவர்கள் ஏதாவது பேசி சீரியஸ் அரசியலை சிரிப்பு அரசியலாக மாற்றிவிடுவார்கள். அதில் முக்கியமானவர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, உதயகுமார், ராஜேந்திர பாலாஜி. இவர்கள் ஏதாவது குண்டக்க மண்டக்க பேசுவதோடு நிற்பதில்லை. ஏதாவது வித்தியாசமாக செய்வதாக சொல்லி, தமிழக அரசியலில் தனி இடத்தையும் பிடித்து வருகின்றனர்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனது ஆதரவாளர்களை ஒரு நாள் தனது வீட்டுக்கு வரச் சொன்னாராம். நம்மை வெயிட்டாக அமைச்சர் கவனிக்கப் போகிறார். அதனாலதான் கண்டிப்பாக வரச்சொல்லியிருக்காருன்னு எல்லோரும் ஆசை, ஆசையாய் போனார்களாம்.

அங்கு அமைச்சர் முன்பு ஒரு நியூமராலஜி ஜோதிடம் பார்ப்பவர் அமர்ந்திருந்தாராம். அவரிடம் ஒவ்வொரு நிர்வாகியின் பெயரையும் சொல்லி, அவருக்கு பெயர் சரியாக இருக்கா, முன்னேறுவாரா, பெயர் மாத்தினா எப்படி இருக்கும்னு என்று சொல்லி, ஒவ்வொருவருக்கும் பெயரை மாற்றச் சொன்னாராம். சிலருக்கு ஏற்கனவே இருந்த பெயருடன் முன்னால் அல்லது பெயருக்கு பின்னால் சில வார்த்தைகளை புதிதாக சேர்த்து பெயர் வைத்தார்களாம். சிலருக்கு பெயர் எப்படி சொன்னாலும் ராசியில்லை என்று சொல்லி புதிய பெயரை வச்சாங்களாம். இந்த பெயர் சூட்டு நிகழ்ச்சிக்குப் பிறகு பல ஆண்டுகளாக பெயர் கூப்பிட்டு பழகியவர்கள், புதிய பெயரை கூப்பிடத் தெரியாமல், அடிக்கடி கூடிப் பேசி உன் பெயர் என்ன, என் பெயர் இது என்று பள்ளிக்கு முதல்நாள் போகும் மாணவர்கள் போல பேசிக் கொள்கிறார்களாம்.

அதோடு விட்டாரா அமைச்சர். வழுக்கை தலை உள்ள நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்துச் சென்று அவர்களது மண்டையை ஆராய்ச்சி செய்து, முடி நடவும் ஏற்பாடு செய்கிறாராம். இதனால் அவருடன் இருக்கும் பல நிர்வாகிகள் முடி நட்டதால் ஆளே இளமையாக மாறிவிட்டார்களாம். நிர்வாகிகளுக்கு சிலர் பணம் கொடுப்பார்கள். சிலருக்கு காரியம் முடித்துக் கொடுப்பார்கள். ஆனால் இவரோ, வித்தியாசமாக யோசிச்சு இப்படி முடி நடுறது, பெயர் மாத்துறதுன்னு இருக்காராம். ஆனாலும், இதை கூட இருப்பவர்களும் ரசிக்கத்தான் செய்கிறார்களாம்.

Related Stories: